சத்திரிய இராமனும் பிராம்மண இராவணனும்
எஸ். இராமச்சந்திரன் (ஆய்வாளர், தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.)

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படத் தொடங்கியதில் இருந்தே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கடலுக்கடியில் தொடர்ச்சியாக அமைந்துள்ள மணல் திட்டுகள் பற்றி வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. இம்மணல் திட்டுகளைச் சேது என்று சொல்வது மிகப் பழமையான மரபாகும். மொத்தம் மூன்று இடங்களில் இத்தகைய மணல் திட்டுகள் அமைந்துள்ளன. கன்னியாகுமரியிலிருந்து இலங்கை வரை அமைந்துள்ளது ஆதிசேது என்றும், கோடிக்கரை முதல் காங்கேசன் துறை வரை அமைந்திருப்பது மத்தியசேது என்றும் , ராமேஸ்வரம் முதல் தலைமன்னார் வரை அமைந்திருப்பது இராமசேது என்றும் அழைக்கப்பட்டன என்று கருதப்படுகிறது. கி.பி. 6ஆம் நூற்றாண்டுக் காப்பியமான மணிமேகலையில், "குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை" என்ற வரி இடம் பெற்றுள்ளது. குமரித் துறையில் அல்லது குமரி முதல் இலங்கை வரை வானரங்களால் பாலம் அமைக்கப்பட்டது என்பது இதன் பொருள். "வென்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கிரும் பெளவம் இரங்கும் முன்துறை வெல்போர் இராமன் அருமறைக் கவித்த பல்வீழ் ஆலம்" என்று அகநானூறு குறிப்பிடுவது கோடிக்கரையையே என்றும் தனுஷ்கோடியே என்றும் இருவேறு கருத்துகள் உண்டு. தனுஷ்கோடி என்பதே பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கன்னியாகுமரியின் கடல் கொண்ட பகுதி என்று சிலப்பதிகாரத்தில் குமரிக்கோடு குறிப்பிடப்பட்டுள்ளது. குமரிக்கோடு, தனுஷ்கோடி, கோடிக்கரை ஆகிய மூன்றும் ஒரு வில்லின் அமைப்பைப் போலக் காட்சியளிக்கும். குமரிக் கண்டம் என்பது வில் வடிவில் அமைந்திருப்பதாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புராணங்கள் குறிப்பிடுகின்ற இத்தகைய விவரங்களை வரலாற்றுடன் தொடர்புபடுத்த முடியுமா என்பது முதன்மையான ஒரு கேள்வியாகும். குறிப்பாக, இராம சேது என்றும் இராமன் சார்பாக வானரப் படைகளால் கடலை அடைத்து இலங்கை வரையிலும் அமைக்கப்பட்ட பாதை அல்லது பாலம் என்றும் கூறப்படும் கதைகளில் எந்த அளவுக்கு வரலாற்று உண்மை பொதிந்துள்ளது என்ற வினாவுக்கு விடை தேடும் கடமை தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் உண்டு.

இயற்கையாக அமைந்திருந்த மணல் திட்டுகளை இராமாயணக் கதையுடன் தொடர்புபடுத்தி மனித மனம் கற்பனை செய்ததன் விளைவாகவே இத்தகைய கதைகள் உருவாகி இன்று வரையிலும் தமது வசீகரத்தை இழந்துவிடாது நீடிக்கின்றன என்று இக்கேள்விக்குச் சுருக்கமாக விடை சொல்லிவிட முடியும். இக்கதைகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் வழங்கத் தொடங்கிவிட்டன என்பதற்கு மேலே நாம் குறிப்பிட்ட அகநானூற்றுப் பாடல் சான்றாக இருக்கிறது. அப்படியானால் இராமன் என்பதும் இராமாயணம் என்பதும் எவ்விதப் பின்னணியும் அற்ற வெறும் கற்பனைக் கதைதானா? இராம காதைக்கும் தமிழ்நாட்டுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையா? அல்லது இராவணன் என்ற திராவிடனை இராமன் என்ற ஆரியன், விபீஷணன் போன்ற 'துரோகி'களின் துணையுடனும் வானரங்கள் எனப் பூடகமாகக் குறிப்பிடப்பட்ட சில பழங்குடிகளின் உதவியுடனும் வீழ்த்திய வரலாறுதான் இராம காதையா?

எம்மைப் பொருத்த அளவில் இறுதியாகக் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள்தாம் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் காட்டிலும் முக்கியமானவை. ஏனெனில், இராமசேது என்பதைக் கற்பனை என்று சொல்லிக் கொண்டே, இராவணன் என்ற திராவிட மன்னன் வீழ்த்தப்பட்டது வரலாறு என்று புரட்டிப் பேசுகிற பாசிச மனப்போக்கு வரலாற்று ஆய்வு எனும் போர்வையில் இன்றைக்கும் தமிழகத்தில் ‘அரச மரியாதையுடன்' உலா வந்து கொண்டிருக்கிறது. சுருக்கமாக இதனைத் 'திராவிட மாயை' என்றே சொல்லலாம். வரலாறு என்பது மிகவும் சிக்கலானது; வரலாற்று ஆய்வு என்பது மிகவும் நுட்பமானது. மிக எளிய கூட்டல் கழித்தல் கணக்கைப் போல வரலாற்றைப் புரிந்து கொள்வது உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் நடத்தவும், மக்களின் கவனத்தைத் திசை திருப்பி அரசியல் வியாபாரம் நடத்தவும் பயன்படலாமே தவிர, உண்மைகளை அவற்றின் ஆழத்துடனும் அகலத்துடனும் புரிந்து கொள்வதற்குப் பயன்படாது.

இராம காதையின் மையக் கரு என்பது சூரிய குலத்தவரான (காஸ்யப ரிஷி கோத்திரத்தவனான) இராமன் என்ற அரசனுக்கும் புலஸ்திய ரிஷி கோத்திரத்தைச் சேர்ந்த இராவணன் என்ற பிராம்மணனுக்கும் நடந்த போராகும். இப்போரில் இராமன் வெற்றி பெற்றான். இந்த மையக் கருவை மட்டும் எடுத்துக் கொண்டால் இதற்கு இணையான, எகிப்திய நாட்டில் சித்திர எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ள கி.மு. 1200ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சி நம் கவனத்தை ஈர்க்கிறது. ராம்செஸ் என்ற எகிப்திய மன்னன் (இவனை இரண்டாம் ராம்செஸ் என வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுவர்) புலஸதி என்னும் கடலோடி இனத்தவர்களைக் கடற்போரில் வென்று எகிப்திலிருந்து விரட்டிய நிகழ்வே அது. புலஸதிகள் இதன் பின்னர் கானானியர்களை அவர்களது நாட்டிலிருந்து விரட்டிவிட்டு அந்நாட்டைக் கைப்பற்றித் தம் இனத்தவரது பெயரை அந்நாட்டிற்குச் சூட்டுகின்றனர். அதுவே இன்றைக்குப் பாலஸ்தீனம் என்று அறியப்படும் நாடாகும். புலஸதிகள், •பிலிஸ்தினியர்கள் என்பதாகப் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளனர். கி.மு. 1000 அளவில் இவர்கள் இஸ்ரவேலருடன் கலந்திணைந்து விட்டனர் என்று கருதப்படுகிறது. •பிலிஸ்டைன் கலை ரசனை என்பது மட்டமான ரசனை என்ற பொருளிலேயே இழி குறிப்புடன் வரலாற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விஷயங்களைப் பொருத்தவரை இராமன் - இராவணன் குறித்த இணையான தன்மைகள் மற்றும் போக்குகள் நம் கவனத்திற்கு உரியன.

எகிப்தியர்கள் சூரிய வழிபாட்டினர். 'ரா' என்ற சூரியக் கடவுள் அரசனின் வடிவில் உலகுக்கு வந்து ஆட்சி புரிவதாக அவர்கள் நம்பினர். அதனால்தான் அரசன் இறந்த பிறகு 'ஒசிரிஸ்' என்ற வருணனின் உலகுக்கு அவர்கள் செல்வதாகக் கருதி அவர்களின் உடலைப் பதப்படுத்தி ப் பேழைகளில் வைத்துப் பிரமிடுகள் கட்டி அடக்கம் செய்தனர். இராமன் என்ற பெயரும், அவனது சற்றே கரிய நிறமும், அவன் சூரிய குலத்தவன் என்ற விவரமும் எகிப்திய அரச குலம் பற்றிய வர்ணனைகளுடன் மிகவும் பொருந்துகின்றன. இந்த இடத்தில் இணைத்துப் பார்க்கத்தக்க மற்றோரு குறிப்பும் உள்ளது. இராமன் காட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் வெளியூர் சென்றிருந்த பரதன் அவசர அவசரமாகத் திரும்பி வருகிறான். அப்போது தசரதன் இறந்துவிட்டிருந்தான். பரதன் வருகின்ற வரையிலும் அவனது உடல் தைலத் தாழியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கம்ப இராமாயணம் குறிப்பிடுகிறது. 14 நாள்கள் தைலத்தில் பாதுகாக்கப்பட்டது. (அயோத்யா காண்டம், தைலம் ஆட்டுப்படலம், பா. 75.) பரதன் வந்து பின்னர் ஈமச் சடங்குகள் நிகழ்ந்ததாகக் கம்ப இராமாயணம் குறிப்பிடுகிறது. இறந்த அரசர்களின் பூதவுடல் எரிக்கப்பட்ட பின்னரோ, எரிக்கப்படாமலோ புதைக்கப்படும் இடங்களில் எழுப்பப்படும் கோயில்கள் பள்ளிப்படைக் கோயில்கள் எனப்படும். எகிப்தியப் பிரமிடுகளுடன் இவற்றை நேரடியாக இணைப்பதென்பது மிகப் பெரும் கால இட இடைவெளியில் ஏற்பட்ட மாறுதல்களையும் கணக்கில் எடுத்துக்கொண்ட பின்னரே சாத்தியமாகும். இருப்பினும் இவை இரண்டுக்கும் பொதுவில் காணப்படும் கருத்தோட்டமே நம் கவனத்துக்குரியது.

இதைப் போலவே இராமன் அதர்வண வேதப் பயிற்சியுடையவன் என்பது வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகின்ற விவரமாகும். பொதுவாக, வைதீகர்கள் அதர்வண வேதத்தை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. வேதத்ரயி என்றே ஒரு வழக்கும் உண்டு. இதன்படி ரிக், யஜுர், சாமம் என்ற மூன்றுதான் வேதம் என அழைக்கப்பெறும் தகுதி பெற்றவை. அதர்வணம் என்பது வால் போன்றது (அதர் என்றால் வால் என்று பொருள் கூறப்படுகிறது) என வைதீகர்கள் கருதுவர். சூன்யம் வைத்தல் போன்ற மாந்த்ரீக சடங்குகளே அதர்வண வேதத்தில் அதிகமும் காணப்படும். மந்திரவாதத்துடனும் அதர்வண வேதத்துடனும் காளி வழிபாட்டைத் தொடர்புபடுத்துவதுண்டு. காளியை அதர்வண பத்ரகாளி என்றே குறிப்பிடுவதுண்டு. பிற்காலச் சோழர்கள் தங்கள் தலைநகராகிய தஞ்சையிலும் முடிசூடுந் தலமாகிய தில்லையிலும் காளியையே தலைமைத் தெய்வமாக நிறுவி, வழிபட்டு வந்தனர். (இது பின்னர் சைவ சமய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது தனி வரலாறு.) சூரிய குலச் சோழர்களுக்கும் காளி வழிபாட்டுக்கும் இருந்த தொடர்பினை இராமனுக்கும் அதர்வண வேதத்திற்கும் இருந்த உறவு என்ற பின்னணியில் வைத்துப் பார்க்கலாம். இராமனும் சோழர்களும் காஸ்யப ரிஷி கோத்திரத்தவர்களாக குறிப்பிடப்படுவதும் இது போன்றே ஒத்த தன்மை உடையதாகும். காஸ்யப ரிஷியின் வரலாற்று மூலம் விரிவான ஆய்வுக்குரியது.

புலஸ்திய ரிஷி கோத்திரத்தைச் சேர்ந்த இராவணன் வீணை இசைப்பதில் தேர்ந்த ஞானம் உடையவன் என்றும் அவனது கொடியில் வீணைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது என்றும் இராமாயணத்தினால் தெரியவருகிறது. 'சாம கானப் பிரியன்' எனப்பட்ட இராவணன் சாம வேதத்தின் இசை நுட்பங்களைக் கற்றறிந்திருந்த வைதிகனாவான். தவிரவும் கம்பன் இராவணனைக் குறிக்க 'ஆரிய' எனும் சொல்லையே பயன்படுத்துகிறான். கும்பகர்ணன் போருக்குப் புறப்படுவதற்கு முன்னர் இராவணனின் காலைத் தொட்டு வணங்கி "ஆரியனே! விடைபெறுகிறேன்" என்று சொல்வதாகக் கம்பன் குறிப்பிடுகிறான். (கும்பகர்ணன் வதைப்படலம், பா. 98.)

இராவணனுக்கும் அகஸ்தியருக்கும் வீணை இசைப்பதில் போட்டி நிகழ்ந்துள்ளதாயும் அந்தப் போட்டியில் இராவணன் தோற்றுவிட்டதால் அவன் தமிழ்நாட்டை விட்டு இலங்கைக்குச் சென்றுவிட்டதாகவும் ஒரு கதை உண்டு. சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் இக்கதையைக் குறிப்பிட்டுள்ளார். இக்கதை முழுமையான கற்பனையாகக்கூட இருக்கலாம். ஆனால், இக்கதையிலிருந்து நாம் பெறக்கூடிய ஒரு செய்தியுண்டு. தமிழுக்கு முதன் முதலில் இலக்கணம் செய்தவராகக் கருதப்படுபவர் அகஸ்தியர் ஆவார். அகஸ்தியரின் இசை மரபும் இராவணன் அல்லது புலஸ்தியரின் இசைமரபும் தம்முள் முரண்பட்டும், மோதியும், ஊடுருவியும், ஒன்றுபட்டும், ஒன்றையொன்று பாதித்தும் வளர்ந்த மரபுகளாகும். 'அகஸ்த்ய' என்ற சொல்லின் வேர்ச் சொல்லாகிய அக் அல்லது அஜ், எகிப்து அல்லது எஜிப்ட் என்னும் பெயர்களுடன் ஒலியொப்புமை உடையதாகத் தெரிகிறது. அது மட்டுமின்றி, மத்தியத் தரைக் கடல் தீவுகளில் கிரீட் தீவில் ஏஜியன், த்ரமிளாய் என்ற இரு மொழிக் குழுக்கள் வாழ்ந்தனர். இம்மொழிகள் திராவிட மொழிகளுடன் ஒற்றுமை உடையன என்று மொழியியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். 'ஏஜியன்', 'த்ரமிளாய்' என்ற இரு மொழிக் குழுக்களுடன், யது குலத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களாக இந்தியப் புராணங்களில் குறிப்பிடப்படும் அஜாமிளன், துவிமிளன் என்போரை நாம் ஒப்பிடலாம். துவிமிளன் என்ற பெயருக்கும் தமிழன் என்ற பெயருக்கும் இடையிலான ஒப்புமையும், த்ரமிளாய், தமிழ் என்ற பெயர்களுக்கு இடையிலான ஒப்புமையும் தற்செயலானவையாகத் தோன்றவில்லை. அஜாமிளன் வம்சம் அல்லது அகத்தியர் மரபு என்பது எகிப்திய மரபுடன் தொடர்புடையதாகத் தோன்றுவதும் தற்செயலான ஒப்புமையன்று. முருகனிடம் தமிழ் கற்ற முதல் முனிவர்களாக அகஸ்தியரையும் புலஸ்தியரையும் அருணகிரிநாதர் போற்றுவார்.

இத்தகைய விவரங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்வது என்ன? பெயர்களின் ஒலியொப்புமைக்கும் மேலாக அவை பிரதிநிதித்துவம் செய்யும் தன்மைகளும் வரலாற்று இயங்கியலுமே நாம் முதன்மையாகப் பரிசீலிக்க வேண்டியவையாகும். எகிப்து நாட்டிலும் பாலஸ்தீனிலும் வழக்கொழிந்த பழமரபுக் கதைகள் வெவ்வேறு பிரதேசங்களின் கிளைக் கதைகளுடன் சேர்ந்து இந்தியாவின் மூலை முடுக்குகள் வரையிலும் பரவியிருக்கின்றன என்றால் அக்கதைகளின் நாயகர்கள் எந்தக் குலங்களை அல்லது நாட்டினங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனரோ அந்தக் குலங்களும் இனங்களும் இந்திய மக்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்து காணப்படுகின்றனர் என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய வரலாற்று உண்மையாகும்.

ஆரிய அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழிகள் பேசுவோரெல்லாம் இந்தோ-ஐரோப்பிய இனக்குழுவினர் என்றும் திராவிட மொழிகளைப் பேசுவோரெல்லாம் தஸ்யுக்கள், அதாவது சப்பை மூக்கும், தடித்த உதடுகளும் கொண்ட கருப்பு இனத்தவர் என்னும் மிக எளிய கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டு நூறாண்டு காலமாக வரலாறு என்ற பெயரில் அரசியல் நடத்திக் கொண்டாடி மகிழ்ந்துவிட்டோம். இனியேனும் சற்றே நிதானித்து வரலாற்றின் நீரோட்டத்தை அதன் ஆழத்தில் காணப்படும் அலைகளுடனும் சுழிகளுடனும் புரிந்துகொள்ள முற்பட வேண்டும்.

வால்மீகி இராமாயணத்தில் இராமனுடைய முன்னோர்களில் ஒருவனாக கல்மாஷ பாதன் என்ற மன்னன் பெயர் குறிப்பிடப்படுகிறது. தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லம் சிவன் கோவில் தலபுராணத்தில், த்ரேதாயுகத்தில் கல்மாஷ பாதன் என்ற சூரிய குலச் சோழன் கட்டிய கோயில் என்ற விவரம் உள்ளது. கல்மாஷ பாதன் என்பது கரிகாலன் என்ற பெயரின் - சரியான அல்லது தவறான - சம்ஸ்க்கிருத மொழி மாற்றமாகும். கரிகாலன் என்ற பெயரில் சோழ மன்னர்கள் பலர் இருந்துள்ளனர். அகநானூற்றுப் பாடல்கள் சிலவற்றில் தொன்மக் கதையாக ஆட்டனத்தி- ஆதிமந்தி கதை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிமந்தியின் தந்தையான கரிகால் அல்லது கரிகாலன், இப்பெயர் கொண்ட சோழ மன்னர்களுள் முதல்வனாக இருந்திருக்கக்கூடும். கரிகாலன் எனும் சோழ மன்னனின் பெயர், இராமனுடைய முன்னோர்களின் பெயர்களில் ஒன்றாக -சம்ஸ்கிருத வடிவில்- சேர்க்கப்பட்டிருக்கிறது என்றால் சூரிய குலச் சோழர்களுக்கும் இராமனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கூறிவிடமுடியுமா?

இத்தகைய வரலாற்றுப் பிரச்சனைகளுக்கு விடையாக சமஸ்கிருதமயமாக்கம் அல்லது மேல்நிலையாக்கம் என்ற ஒற்றைச் சொல்லை புழங்கிவிடுவது பிரச்சனையிலிருந்து எளிதில் விலகி ஓடுவதற்கு வேண்டுமானால் உதவலாமே தவிர நேர்மையான ஆய்வுகளுக்கு உறுதுணையாக இருக்காது. ராம்செஸ் எனும் எகிப்திய மன்னனுக்கும் தமிழகத்தின் கரிகால் சோழனுக்கும் இடையில் யார் முன்னவர் என்பது குறித்த காலக் கணிப்பில் முரண்பாடுகள் இருக்கக்கூடும். இந்தியச் சூழலில் இராமாயணக் கதை முழுமையான வடிவம் பெற்ற பிறகு, கரிகாலன் என்ற சூரிய குல மன்னன், ராம்செஸ் என்ற எகிப்திய மன்னனுக்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவனாக இருந்திருந்தாலும்கூட, இந்திய நிலப் பரப்பிலுள்ள நாடுகளுடனும், நதிகளுடனும் இரண்டறக் கலந்துவிட்டவன் என்ற வகையில், பல்வேறு கதைக் கூறுகள் கலந்து காவிய நாயகனாக உருவாகிவிட்ட இராமன் என்ற பிரம்மாண்டத் தன்மையுள்ள மீமனிதனுக்கு முன்னோராகக் குறிப்பிடத்தக்கவனாகக் கரிகாலன் இருந்தமையால் அவனை ஒரு முன்னோன் என்ற வடிவில் மட்டும் பதிவு செய்து வைத்தனர் எனக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையிலும் பள்ளிப்படைக் கோயில் எழுப்பும் வழக்கம் சோழர்களிடமே அதிக அளவில் நிலவியிருக்கிறது. இதற்கான காரணத்தையும், நாம் மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றுத் தரவுகள் எனும் பின்னணியில் வைத்து ஆராய்ந்தால் இப்பொருள் குறித்து இன்னும் ஆழமான புரிதல் உருவாகும் வாய்ப்பு உண்டு.

Related info: Ravan's statue (worshiped by Shrimali Brahmins) stokes controversy in Jodhpur (The New Indian Express, October 28, 2007)